ஐஏஎஸ் பணியில் மீண்டும் வி.கே.பாண்டியன்

ஐஏஎஸ் பணியில் மீண்டும் வி.கே.பாண்டியன்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியன்.

பட்நாயக்கின் உதவியாளரான வி.கார்த்திகேய பாண்டியன் மீண்டும் ஐஏஎஸ் பணியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒடிசா முன்னால் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரான வி.கே பாண்டியன் ஏழு மாதங்களுக்கு முன்பு ஐஏஎஸ் பணியில் இருந்து விலகிய பின் பிஜேடியில் இணைந்தார். எனினும், தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியால் அரசியலிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 வருடங்களாக, ஐந்து முறை தொடர்ந்து ஒடிசா முதல்வராக இருந்தவர் நவீன் பட்நாயக். இவரது பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆட்சி, இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிடம் பறிபோனது. இதற்கு முதல்வர் நவீனுக்கு நெருக்கமாக இருந்த வி.கே.பாண்டியன் காரணம் எனப் புகார் எழுந்தது. இதை மறுத்து, பாண்டியனுக்கு ஆதரவாக முதல்வர் நவீன் கூறியதை கட்சியினர் ஏற்கவில்லை. இதனால், கடந்த ஞாயிறு அன்று தன் ஏழு மாத அரசியல் வாசத்திலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்திருந்தார்

கடந்த வருடம் அக்டோபரில் தனது ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார் வி.கே.பாண்டியன். 2000 பேட்ச்சின் அதிகாரியான அவரது ராஜினாமாவை மத்திய அரசு மூன்று தினங்களில் ஏற்றது. எனவே, தனது விருப்ப ஓய்வை வாபஸ் பெறுவதாக எழுதினால் வி.கே.பாண்டியனின் விருப்ப ஓய்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யும் எனத் தெரிகிறது.

இவர்போல், விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதை வாபஸ் பெற்றதற்கான முன் உதாரணங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஷா பைஸல், கடந்த 2019-ல் தனது பதவியை ராஜினாமா செய்து புதிய கட்சியை துவக்கினார். பின்னர் மனம் மாறி மீண்டும் ஐஏஎஸ் பணியில் தொடர விரும்பினார். இதற்காக, பைஸலின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, ஏப்ரல் 2022-ல் அவரை ஐஏஸ் பணியில் அமர்த்தியது. மீண்டும் ஐஏஎஸ் பெற்ற ஷா பைஸல் தற்போது அயல் பணியாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரியாக உள்ளார்.

இந்த வகையில், பாண்டியனும் தன் விருப்ப ஓய்வை ரத்து செய்து ஐஏஎஸ் பணியில் தொடருவார் என்ற எதிர்பார்ப்பு ஒடிசாவில் உள்ளது. ஏனெனில், இவர் தனது 23 ஆண்டுகால ஒடிசா அரசு பணியில் பல துறைகளிலும் திறமையாக செயல்பட்டிருந்தது தான் காரணம். இவரது பணித்திறமையின் காரணமாக மத்திய அரசு, பாண்டியனின் ராஜினாமாவை ரத்து செய்து விடும் எனத் தெரிகிறது.

இவரது மனைவியான சுஜாதா ஒடிசாவில் தம் சொந்த மாநில ஐஏஎஸ் பணியில் தொடர்கிறார். தற்போது, குழந்தை பராமரிப்பின் கீழான விடுப்பை ஆறு மாதங்களுக்காக அவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story