அண்ணாமலையின் மீது கமலாலயம் கடுப்பு..!

அண்ணாமலையின் மீது  கமலாலயம் கடுப்பு..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)

அண்ணாமலையின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என கமலாலய நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தி.மு.க-வில் சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடு சரியில்லை என்ற அதிருப்தியிலிருக்கிறது தலைமை. முதற்கட்டமாக மூன்று மாவட்டச் செயலாளர்களை மாற்றவும் முடிவெடுத்திருக்கிறதாம். “அவர்களில் ஒருவர், ஆந்திர எல்லையையொட்டிய ‘திரு’வான மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இன்னொருவர் அல்வா மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர். மற்றொருவர் டெல்டா மாவட்டப் புள்ளி” என்கிறது அறிவாலய வட்டாரம். இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட `திரு’வான மாவட்டத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர், சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேலிடத்து மாப்பிள்ளையை நேரில் சந்தித்து வாழ்த்துவது போல, ‘மாவட்டச் செயலாளர் பதவிக்குத் துண்டு போட்டு விட்டு வந்து விட்டாராம்.

“தி க்ரைம் முன்னேற்ற கழகம்... தி.மு.க-வில் ரெளடிகள்” என்ற பெயரில் 112 பேர் அடங்கிய லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுப் பேசிய அண்ணாமலை, “பா.ஜ.க-வில் யார் யாரோ இருப்பதாகச் சொல்லி குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் செய்வோரின் பட்டியலை நான் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறேன்” என்று நீட்டி முழக்கினார்.

தி.மு.க அதற்கு பெரிதாக எதிர்வினையாற்றவில்லையென்றாலும், கமலாலய சீனியர்களோ கரித்துக்கொட்டுகிறார்கள். “ஏற்கெனவே, `தி.மு.க ஃபைல்ஸ்’ என்ற பெயரில் இப்படித்தான் ஓர் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதை டிரங்குப் பெட்டியில் கொண்டு போய் ஆளுநரிடமும் கொடுத்தார்.

எந்தப் பிரயோஜனமும் இல்லை. மறுபடியும் ஊடக வெளிச்சத்துக்காக அடுத்த லிஸ்ட்டை வெளியிட்டிருக்கிறார். இவர் திருந்தவே மாட்டாரா... தேவையில்லாத வேலைகளை விட்டுவிட்டு கட்சி வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யக் கூடாதா?” எனக் கேட்கிறார்கள் அந்த சீனியர்கள்.

Tags

Next Story