ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு:  வெள்ள அபாய எச்சரிக்கை
தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 92,000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 92,000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:

கர்நாடகா, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடியிலிருந்து 1.5 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 62.000 கன அடியாக இருந்தது. இன்று (26.7.2024) மாலை மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 92.000 கன அடியாக உயர்ந்துள்ளது தொடர்ந்து 1,00.000 கன அடியாக உயர வாய்ப்புள்ளது. இதனால் சினியருவி, மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகள், ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

நீர்வரத்து அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story