பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை

பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Tirupur News - பல்லடம் பகுதியில் சமீபத்தில் வெட்டப்பட்ட மரங்கள்.

Tirupur News - பல்லடத்தில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கோடை வெயில் காலத்தில் மரங்களை இப்படி வெட்டித் தள்ளுவது இயற்கை ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது.

Tirupur News Tirupur News Today - பல்லடம் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் அடிக்கடி வெட்டப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், ‘கொரோனா' தொற்று உணர்த்திச் சென்ற பாடத்தை மறந்து, கொடூரமாக மரங்களை வெட்டி அழிக்கும் செயல்கள் தொடர்ச்சியாக பல்லடம் பகுதியில் நடந்து வருகின்றன.

புவி வெப்பமடைதல் என்பது, இன்று உலக நாடுகள் அனைத்துக்கும், மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா காலகட்டத்தில், ஆக்சிஜனின் தேவை என்ன என்பதை உணர வைத்தன மரங்கள். 'அது ஒரு காலகட்டம்' என, வரலாற்றுக் கதைகள் கூறுவதைப் போன்று, நடந்ததை புறந்தள்ளிவிட்டு, மக்கள், மீண்டும் தங்களின் பழைய வாழ்க்கைக்கே திரும்பி விட்டனர்.

சரமாரியாக மரங்கள் வெட்டப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சாலை விரிவாக்கம், குழாய் பதிப்பு, கட்டட கட்டுமானம் என, தினசரி நூற்றுக்கணக்கான மரங்கள் கண்முன்னே வெட்டி வீசப்பட்டு வருகின்றன. நாங்கள் மட்டும் சளைத்தவர்கள் இல்லை என, பொதுமக்கள் சிலரும், மரங்களை துச்சமென கருதி வெட்டி குவித்து வருகின்றனர்.

'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்' என்பது வெறும் வாசகமாக மட்டுமே உள்ளது. விழிப்புணர்வுக்காக, வாசகத்தை படித்து விட்டு செல்வதை விட, இதை செயல்படுத்தி காட்டுவது தான் சிறந்தது.

எத்தனையோ தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மிகவும் சிரமப்பட்டு மரம் வளர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வைக்கப்படும் மரங்களைக் காட்டிலும், வீழ்த்தப்படும் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை ஆகியவை செயலிழந்து காணப்படுகின்றன. நமது நாட்டில், சட்டம் இயற்றப்பட்டு, கோர்ட் உத்தரவிட்ட போதும்,அவற்றை செயல்படுத்துவதும், பின்பற்றுவதும் யார் என்பதுதான் கேள்வியாக உள்ளது.

இவ்வகையில், மரங்கள் வளர்ப்பதற்கும், வெட்டுவதற்குமான சட்டங்கள் போதுமானதாக இல்லை. மரங்கள் வளர்ப்பதை கட்டாயமாக வேண்டும்; வெட்டுவதற்கு கடுமையான சட்டங்களை பிறப்பிக்க வர வேண்டும். சுயநலத்துக்காக, ஒவ்வொருவரும் இவ்வாறு மரங்களை வெட்டி குவித்து வந்தால், எதிர்காலத்தில், எந்த உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக இந்த பூமி மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

எனவே இதுபோன்ற மரங்களை வெட்டி இயற்கையை அழிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story