வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் சாமி சிலைகள்: செஞ்சியில் பரபரப்பு

வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் சாமி சிலைகள்: செஞ்சியில் பரபரப்பு

கல்பண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள்

வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சாமி சிலைகளை வைத்ததால் பரபரப்பு நிலவியது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் காஜாபதுல்லா தர்காவுக்கு சொந்தமான வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடமான சின்னகஞ்சான் குளம் எதிரே, பழமையான கல் மண்டபத்தில் மர்ம நபர்கள் நள்ளிரவில் விநாயகர், சிவன், பார்வதி, நந்திபகவான் சிலை வைத்ததால் பரபரப்பு நிலவியது.

செஞ்சி, சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலையில் இஸ்லாம் சமயத்திற்கு சொந்தமான வக்புவாரிய சொத்துக்கள் 13 ஏக்கர் 75 சென்ட் நிலப்பரப்பு உள்ளது. இப்பகுதியில், மூன்று குளங்களும் ஒரு குட்டையும் உள்ளது,

இப்பகுதியில் இஸ்லாம் சமயத்தை சார்ந்த இறந்தவர்களை அடக்கம் செய்யும் கபஸ்தலம் காஞ்சான் சிறிய குளத்தின் அருகே அமைந்துள்ளது .

இக்குளக்கரையின் கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு உள்ள கல் மண்டபம், ஒன்று உள்ளது . முன்னோர்கள், இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிவன் சிலையும் அதற்கு எதிரே நந்தி சிலையை வைத்தும், அதன் அருகிலேயே மூன்று அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையும், எதிரே எலி (மூஷிகம்) சிலையையும் பீடம் மற்றும் செங்கலை கொண்டு கட்டிடம் வைத்து சிலையை நிறுவி, சிலைகளுக்கு பூஜைகள் இட்டும் பூசணிக்காய் உடைத்தும் வழிபட்டுச் சென்றுள்ளனர்.

இதனை அதிகாலையில் கண்ட அப்பகுதி மக்கள், செஞ்சி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . அதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் கோவிந்தன், கிராம ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் கிராம உதவியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கவீனா, செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலைகளை அவ்விடத்தில் இருந்து எடுத்து, செஞ்சி கருவூலத்தில் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் அதிகாலை முதல் பரபரப்பு நிலவி வருகிறது.

நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள குளத்தில் சுவாமி சிலைகளை நிறுவி வழிபாடு செய்து சென்றுள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால், செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story