வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை

வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
X

வெடி விபத்து நடந்த இடத்தில்,  மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை

ஆவியூர் வெடிமருந்து சேமிப்பு கிடங்கில், ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை நடத்தினார்

ஆவியூர் வெடிமருந்து சேமிப்பு கிடங்கில், ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கண்ணதாசன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கீழஉப்பிலிக்குண்டு சாலையில், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான எஸ்.எஸ்.பி.ஆர் டிரேடர்ஸ் என்ற வெடிபொருள் சேமிப்பு கிடங்கு இயங்கி வந்தது. மேற்கண்ட வெடிபொருள் சேமிப்பு கிடங்களில், கடந்த மே மாதம் 1 ம் தேதி சேமிப்பு கிடங்கில் இருந்து வெடி பொருட்களை வேனில் ஏற்றிய போது எதிர்பாராத விதமாக வெடி மருந்துகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டு, பணியில் ஈடுபட்ட மூன்று பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்

இந்த விபத்து தொடர்பாக, ஆவியூர் காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் சேமிப்புக் கிடங்கு உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் பங்குதாரர்கள் சேது, ராம்ஜி, ராமமூர்த்தி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வெடி விபத்து ஏற்பட்ட எஸ்.எஸ்.பி.ஆர் டிரேடர்ஸ் என்ற எரிபொருள் சேமிப்பு கிடங்கிற்கு வழங்கப்பட்ட எல்.இ. திரி உரிமம் சென்னை இணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையால் 2.5.2024 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமஸ் முன் வந்து வழக்கு பதிவு செய்து வெடி பொருள் சேமிப்பு கிடங்கு வெடி விபத்து தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இன்று காலையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் செயலர் கண்ணதாசன் தலைமையிலான குழு விபத்து நடைபெற்ற இடத்தில் விசாரணையை தொடங்கியது.

விசாரணையில் ,மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட தொழிலக பாதுகாப்பு துறை, மாவட்ட வருவாய்த்துறை, சிவகாசி மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் விபத்து நடைபெற்ற இடத்தை சுற்றியுள்ள இரண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோரிடம் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் குழு விசாரணை மேற்கொண்டது.

கல்குவாரி வெடி மருந்து சேமிப்பு கிடங்கு விபத்து விதி மீறி செயல்பட்டதால், விபத்து நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், கல்குவாரி மற்றும் வெடிமருந்து குடோன் ஆலையிலிருந்து இரவு பகலாக வாகனங்கள் வந்து செல்வதும் கல்குவாரியில் வைக்கப்படும் வெடிபொருட்கள் வெடித்து சிதறும் சத்தம் 24 மணி நேரமும் கேட்கிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூங்க முடியவில்லை என்றும், கிராமத்தின் அருகே பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் கல்குவாரி மற்றும் சேமிப்பு கிடங்கினை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜரான அனைத்து துறை அதிகாரிகளிடம் இருந்து விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அவர்கள் அளித்த வாக்குமூலங்களை அறிக்கையாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் என, மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர் செயலர் கண்ணதாசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

Tags

Next Story